Monday, January 22, 2018

திருப்புகழ் - Explaining the moment of death and the need to surrender unto the Shiva

திருப்புகழ்

பாடல் 389

                                                    விரகொடு வளைசங் கடமது தருவெம்
                                                            பிணிகொடு விழிவெங்  கனல்போல
           வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண்  டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங்  கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும்  பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு ...
சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய
பாசக் கயிற்றைக் கொண்டு,

விழி வெம் கனல் போல வெறி கொடு சமன் நின்று ... கண்கள்
தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று,

உயிர் கொள்ளும் நெறி இன்று என ... உயிரைக் கொள்ள
வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து,

விதி வழி வந்திடு போதில் ... விதியின் ஏற்பாட்டின்படி
நெருங்குகின்ற அச்சமயத்தில்,

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர்
கண் புனல் பாயும் கலகமும் வரு முன்
 ... வஞ்சகம் மிகுந்த
மனத்துடன் மாதர்கள்,சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர்
பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக,

குலவினை களையும் கழல் தொழும் இயல் தந்து
அருள்வாயே
 ... முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும்
திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

பரவிடும் அவர் சிந்தையர் ... தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்தில் உறைபவரும்,

விடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் ...
நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற
படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால்,

அம் பழ மறை மொழி பங்கயன் ... அழகிய பழைய வேதத்தை
ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன்,

இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி ...
அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை
உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி,

அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற ...
பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும்
பொருத்தி,

அனல் அம் கையில் மேவ ... நெருப்பு அழகிய கையில் விளங்க,

அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு ... பார்வதி
தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய
சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும்

அருணையில் மருவும் பெருமாளே. ... திருவண்ணாமலையில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.

No comments:

Post a Comment